தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்பவே சசிகலா வந்துள்ளார் – பாரதிராஜா


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய சசிகலா, செய்தியாளர்களிடமும், அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடமும் பேசினார்.
சசிகலா பேசியதாவது, “ “என்னுடைய அக்கா புரட்சித்தலைவியின் 73-வது பிறந்த நாள் அன்று வந்துள்ள கழக உடன்பிறப்புகளுக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவில் இருந்த போது தமிழக மக்கள் கழக உடன்பிறப்புகள் எல்லோருடைய வேண்டுதலால் நான் நலம் பெற்று தமிழகம் வந்துள்ளேன் அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்தித்து தேர்தலை சந்திக்க வேண்டும். திமுக தான் நமக்கு எதிரி அவர்களை வீழ்த்த சபதம் ஏற்றுக் கொள்வோம். தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் நம்முடைய ஆட்சி தொடர வேண்டும் என்று புரட்சித்தலைவி கூறிச் சென்றுள்ளார் அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும். இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நானும் உங்களுக்கு துணை இருப்பேன். விரைவில் தொண்டர்களை பொதுமக்களையும் சந்திக்க வருவேன்” என்றார்.
மேலும் இன்று சசிகலாவை நேரில் சந்திக்க பாரதிராஜா, சரத்குமார், ராதிகா சரத்குமார், இயக்குநர் அமீர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வந்திருந்தனர். சசிகலாவுடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, “சசிகலா எனும் சாதனை தமிழச்சியை பார்க்க வந்தேன். தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வந்திருக்கிறார் சசிகலா” என்றார்.