குத்தாலத்தில் அமையும் புதிய அரசுக்கல்லூரிக்கு கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெயரைச் சூட்ட வேண்டும்: முதலமைச்சருக்கு காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன் கோரிக்கை!


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அரசு கலைக்கல்லூரிக்கு அந்தப்பகுதியில் பிறந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மயிலாடுதுறை மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான குத்தாலத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதிலும் இந்த கல்வியாண்டில் இருந்தே புதிய கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி வாய்ப்பினைப் பெறுவார்கள்.
இந்த நேரத்தில் புதிய கல்லூரிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றித் தருவதற்கு ஆவன செய்ய வேண்டுமென முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் புதிய கல்லூரிக்கு குத்தாலத்திற்குப் பக்கத்திலுள்ள தேரிழந்தூரில் பிறந்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் கம்பராமாயணம் உள்ளிட்ட காப்பியங்களை இயற்றி, கவிச்சக்கரவர்த்தி என்று புகழப்படும் கம்பர் பெயரினைச் சூட்டிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை’
-என்ற பாரதியின் வாக்குபடி பூமியில் சிறந்த புலவர்களில் முதலில் வைத்து உலகெங்கும் தமிழர்களால் கொண்டாடப்படுகிற கம்பரின் பெயரை அவரது பிறந்த பகுதியில் அமையும் அரசு கல்லூரிக்குச் சூட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். தமிழுக்கும் தமிழக அரசு செய்கிற மரியாதையாக அமையும்.
எனவே, குத்தாலத்தில் புதிய கல்லூரி அமைகிற போதே ‘கவிச்சக்கரவர்த்தி கம்பர் அரசு கலைக்கல்லூரி’ என்ற பெயரில் அமைத்திட முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ – இவ்வாறு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில் காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தக் கோரிக்கையின் நகல் உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளருக்கும், தலைமைச்செயலாளருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.