சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவார்: தினகரன் தகவல்!


வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார் என தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த நிலையில் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலையானார். கொரோனா தொற்றிலிருந்து மீண்ட அவர் தற்போது பெங்களூரு புறநகர் பகுதியிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் ஓய்வில் இருக்கிறார். வரும் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு புறப்பட்டு அவர் சென்னை வரவுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இந்த நிலையில் தென்காசி திருமலைக் கோயிலில் தினகரன் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிராக புகாரளிக்கப்பட்டதற்கு பதிலளித்தார். டிஜிபியிடம் அல்ல முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய இயலாது என தெரிவித்தார்.
மேலும், திமுகவை ஆட்சிக்கு வர விடமாட்டோம் எனத் தெரிவித்த தினகரன், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயமாக போட்டியிடுவார் எனவும் கூறினார்.
2 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறை தண்டனை பெற்றவர்கள் விடுதலையான நாளில் இருந்து அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அடுத்த 6ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தகவலும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: News7tamil