தை அமாவாசை… பல்லாயிரக் கணக்கானோர் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்


தை அமாவாசை தினமான இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் காவிரி ஆற்றில் நீராடி பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
தை அமாவாசை தினமான இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் காவிரி ஆற்றில் நீராடி பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இதேபோன்று அய்யாளம்மன் படித்துறை, முசிறி காவிரி படித்துறை, முக்கொம்பு காவிரி ஆறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
இதேபோல, தை அமாவாசை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் சேதுகரை மற்றும் தேவிப்பட்டினம் கடற்கரை பகுதிகளில் உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள், அக்னி தீர்த்தக் கரையில் தீர்த்தமாடி இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அருகில் உள்ள ஜெயவீர ஆஞ்சிநேயர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். இங்கே வழக்கத்தைவிட கூட்டம் குறைவாக காணப்பட்டது. இங்கே 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி நெல்லை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் தாமிரபரணி ஆற்றங்கரையில் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 16 வகை தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களின் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து கடலில் புனித நீராடினர். இதில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி கோடியக்கரை கடற்கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விரதம் மேற்கொண்டனர்.
வைகை ஆற்றில் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்து முன்னோர்களுக்கு வைகை ஆற்றில் தர்ப்பணம் செய்து வருகின்றனர் இங்கு தர்ப்பணம் செய்வது காசி நிகரானது என்பது நம்பிக்கை.
இதேபோல ஏராளமானோர் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் நீராடி தர்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர்.