கோயில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பார்சலில் அன்னதானம் வழங்கல்: இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு


கோயில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பார்சலில் அன்னதானம் வழங்க இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44,120 கோயில்கள் உள்ளன. இவற்றில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் மதிய நேரங்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பக்தர்கள் தரிசனத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு அறிவித்த பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில் செப். 1-ம்தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும், கொரோனா வைரஸ்பரவல் காரணமாக அன்னதானம் வழங்கப்படாமல் இருந்து வந்தது.இந்நிலையில், கோயில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பார்சலில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது
தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில் பார்சலில் அன்னதானங்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், காலை 11 மணி முதல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்டவற்றை பார்சல் செய்து வழங்கி வருகிறோம்’’ என்றார்,