மயிலாடுதுறை மாவட்டத்தில் 120 கவுன்சிலர் பதவிகளுக்கு 601 பேர் போட்டி!!



மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் (ஜனவரி) 28-ந் தேதி தொடங்கி கடந்த 4-ந் தேதி வரை நடந்தது.
2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 123 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 858 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 20 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
தரங்கம்பாடி பேரூராட்சியில் 3 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் 120 கவுன்சிலர் பதவியிடங்களுக்கு மட்டுமே தற்போது தேர்தல் நடக்கிறது. வேட்புமனு வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான நேற்று 234 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
மயிலாடுதுறை நகராட்சியில் 75 பேர், சீர்காழியில் 14 பேர், பேரூராட்சிகளில் குத்தாலத்தில் 38 பேர், மணல்மேட்டில் 35 பேர், தரங்கம்பாடியில் 41 பேர், வைத்தீஸ்வரன்கோவிலில் 31 பேர் என 234 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
தற்போது தேர்தல் களத்தில் மயிலாடுதுறை நகராட்சியில் 211 பேர், சீர்காழி 133 பேர், பேரூராட்சிகளில் குத்தாலம் 80 பேர், மணல்மேடு 66 பேர், தரங்கம்பாடி 61 பேர், வைத்தீஸ்வரன்கோவில் 50 பேர் என மொத்தம் 601 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்டத்தில் 120 கவுன்சிலர் பதவிகளுக்கு 601 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.