தஞ்சை தேர் விபத்து: வெடித்து சிதறிய விளக்குகள்.. தூக்கி வீசிய மின்சாரம்.. நேரில் பார்த்தவர் கண்ணீர்!



தஞ்சை: தஞ்சை தேர் விபத்தில் சிக்கிய 11 பேர் பலியான சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பதைபதைப்பு தகவல்களை அளித்துள்ளார்கள்.
கி.பி. 7ஆம் நூற்றாண்டை சேரந்தவர் அப்பர் திருநாவுக்கரசர். இவர் தமிழகத்தில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவராவார். இவரை திருஞானசம்பந்தர் அப்பர் என அழைத்தமையால் அப்பர் என்றும் நாவுக்கரசர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் ஒரு முறை தஞ்சை மாவட்டம் களிமேட்டில் ஒரு இடத்தில் தங்கி ஓய்வெடுத்தார். இதையடுத்து அந்த இடத்தில் அப்பருக்கு கோயில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் அப்பர் குருபூஜை நிகழ்த்தப்பட்டு வருகிறது.
93 ஆண்டுகளாக களிமேட்டில் அப்பர் குருபூஜை நடந்து வந்த நிலையில் 94 ஆவது குருபூஜை விழா நேற்றைய தினம் தேரோட்டத்துடன் தொடங்கியது. தேர் சப்பரத்தில் சுவாமி சிலை வைக்கப்பட்டு அதற்கு நிறைய மின் விளக்குகளை பொருத்தி அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.
தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. தேர் செல்லும் இடங்களில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியை ஒதுக்கிவிட்டுக் கொண்டே வந்தனர். இந்த நிலையில் ஒரு இடத்தில் திரும்பும் போது தேர் பாரம் தாளாமல் தேர் பின்னோக்கி இழுக்கப்பட்டு திடீரென உயர் மின் கம்பியில் உரசியது.
இதனால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில் தேர் ஊர்வலமாக தெருக்களுக்கு வந்தது. அப்போது ஒரு இடத்தில் தெரு முற்றத்தில் தேரை திருப்பும் முயற்சி நடந்தது. அந்த சமயத்தில் தேரில் இருந்தவர்கள், வடம் பிடித்து இழுத்தவர்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டனர்.
இதை பார்த்து மற்றவர்கள் பதறி போய் ஓட தொடங்கினர். ஆனால் அதற்குள் யாரோ மின்சாரம் பாய்ந்துவிட்டது. தேருக்கு அருகே போக வேண்டாம் என்றனர். இதனால் பலர் அப்படியே நின்றுவிட்டனர். இல்லாவிட்டால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். கரண்ட் தூக்கி அடித்தவுடன் பலர் துடிதுடித்து தூக்கி வீசப்பட்டனர்.
பலருக்கு கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. தூக்கி அடிக்கப்பட்டவர் அலறினர். தேரில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறியது. இதனால் தேர் முற்றிலும் எரிந்தது. தீயணைப்பு துறை வரும் வரை தேரின் அருகே கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 94 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை இது போன்ற விபத்து இந்த விழாவில் நடந்துள்ளது. திருவிழாவுக்காக பலர் சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியாக வந்தனர். வந்த இடத்தில் இப்படி ஒரு கோர சம்பவம் நடந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என விபத்தை நேரில் பார்த்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
Advertisement