தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (26.3.2025) சட்டமன்றப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார் கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் கட்டுவதற்கு சர்வே எண். 302/1, ஆவுடையார் கோவில் வட்டம் என்ற இடத்தில், அரசு புஞ்சை தரிசு நிலம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 1.8.2019 அன்று நிலமாற்றம் செய்யப்பட்டு இந்த காவல் நிலையத்திற்கு சொந்தமாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் 27.1.2025 தேதியிட்ட அரசாணை (நிலை) எண். 43-இன் படி 2 கோடியே 59 இலட்சத்து 83 ஆயிரம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்டும் பணி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கழகத்தால் வருகின்ற மே மாதம் தொடங்கப்பட்டு பிப்ரவரி 2026-க்குள் கட்டி முடிக்கப்படும்.

 உறுப்பினர்  தி. ராமச்சந்திரன் அவர்கள்

பேரவைத் தலைவர் அவர்களே, தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து இந்தியாவில் உள்ள முதல்வர்களுள் முதல்வராக தமிழ்நாட்டின் நலனை அரணாக காக்கும் முதலமைச்சருக்கு குரல் கொடுத்தும், மாண்புமிகு முதற்கண் எமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டு, அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார் கோவில் வட்டம் தீயணைப்புக் கட்டடத்திற்கு நிரந்தரக்கட்டடம் அறிவித்ததற்கும், குடிநீர் பிரச்சினைக்காக நிரந்தர தீர்வு காணும் விதத்தில் சுமார் 1820 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி அறந்தாங்கி தொகுதி முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பயன்பெறும் விதத்தில் கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவித்த நமது நல்லாட்சி நாயகன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என் சார்பிலும், அறந்தாங்கி மக்கள் சார்பிலும் மனம் நிறைந்த நன்றியினை முதற்கண் தெரிவித்துக்கொண்டு, இத்திட்டத்தை அறிவித்த நிதியமைச்சர், துறை அமைச்சர். துறை சார் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு, அறந்தாங்கி நகரில் மக்கள் தொகை பெருகி வருவதாலும் நகரின் எல்லைப் பகுதிகள் விரிவடைவதாலும், கூடதலாக ஒரு புதிய காவல் நிலையம் அல்லது இருக்கின்ற காவல் நிலையத்தை கூடுதல் காவலர்களை நியமித்து பெரிய ரக காவல் நிலையமாக தரம் உயர்த்த அரசு முன் வருமா? என்பதை தங்கள் வாயிலாக கேட்டு அறிய விரும்புகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பதில்

1949-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அறந்தாங்கி காவல் நிலையத்தில் தற்போது, 1-காவல் ஆய்வாளர், 4-உதவி ஆய்வாளர்கள், 7-தலைமை காவலர்கள், 12-முதல் நிலை காவலர்கள், 39-இரண்டாம் நிலை காவலர்கள், என மொத்தம் 63 காவல் ஆளிநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், அறந்தாங்கி உட்கோட்டத்தில், அறந்தாங்கி காவல் நிலையம், நாகுடி காவல் நிலையம், ஆவுடையார்கோவில் காவல் நிலையம், கரூர் காவல் நிலையம் மற்றும் ஏம்பல் காவல் நிலையம் ஆகிய 5 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களும், அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல்நிலையம் மற்றும் அறந்தாங்கி போக்குவரத்து காவல் நிலையமும் செயல்பட்டு வருவதாலும், கடந்த சில ஆண்டுகளில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையையும் வைத்துப் பார்க்கையில், அறந்தாங்கி காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து அறந்தாங்கியில் கூடுதலாக மற்றொரு புதிய காவல் நிலையம் அமைக்க அவசியம் எழவில்லை.

உறுப்பினர்  தி. ராமச்சந்திரன் அவர்கள்

முதலமைச்சர் அவர்களுக்கு, கூடுதல் காவல் நிலையம் இல்லாவிட்டாலும், ரகத்தை உயர்த்தி, பெரிய ரக காவல் நிலையமாக அமைக்க வேண்டும். காரணம் எல்லைகள் விரிவடைந்து வருவதால் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக்கொண்டு, ஆவுடையார் ஒன்றியம், கரூரில் தற்போது இயங்கி வருகின்ற காவல்நிலையம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றது. அதற்கு ஒரு நிரந்தர கட்டடமும், அறந்தாங்கி நகர், மணமேல்குடி, ஆவுடையார் கோவில் மீமிசல் காவலர் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து உள்ளதால் புதிய குடியிருப்பு கட்டடங்களை அமைத்து தர அரசு முன் வருமா? என்பதை கேட்டுக்கொண்டு, கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், வாய்ப்பளித்த மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும் நன்றி பாராட்டி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்

பேரவைத் தலைவர் அவர்களே, புதுக்கோட்டை, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, ஆவுடையார் கோவில் வட்டம், கரூர் காவல் நிலையம் 1981-ஆம் ஆண்டு கட்டப்பட்டு சொந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டில் இக்கட்டடத்தின் மேல்தளம் பழுதடைந்த காரணத்தால், அரசுக்குச் சொந்தமான இ-சேவை மையக் கட்டடத்திலிருந்து அந்த காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, பழுதடைந்திருக்கும் கரூர் காவல் நிலையத்தினை இடித்துவிட்டு புதிய காவல் நிலையக் கட்டடம் கட்டித் தருமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஏற்கனவே இந்த கோரிக்கையை அரசுக்கு வைத்திருக்கிறார். நீங்களும் இப்போது இந்த அவையில் வைத்திருக்கிறீர்கள். அதன் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டம், கரூர் காவல் நிலைய இடத்தினை ஆய்வு செய்து அங்கு புதிய காவல் நிலையம் கட்டுவதற்குரிய சாத்தியக் கூறு அறிக்கை மற்றும் தோராய திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது. எனவே, காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள் மூலம் கரூர் காவல் நிலையத்தற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான கருத்துரு பெறப்பட்டபின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர்  கணபதி அவர்கள்

பேரவைத் தலைவர் அவர்களே, மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் அயம்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 1 இலட்சத்து 16 ஆயிரம் மக்கள் தொகை கொண்டது. இந்த ஊராட்சியில் Indian Medical Research Centre அலுவலகமும், மத்திய போதை தடுப்பு தலைமையகமும் மற்றும் மத்திய அரசின் Food Corporation தலைமையகம், ஆசியாவிலேயே மிகப் பெரிய வீட்டு வசதி திட்டமும் இங்கு தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏறக்குறைய இந்த 1 இலட்சத்து 15 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு முன் வருமா?

என்பதை  பேரவைத் தலைவர் மூலமாக, மாண்புமிகு திராவிட நாயகன் அவர்களை கேட்டு அமைகிறேன். நன்றி.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்

பேரவைத் தலைவர் அவர்களே, சென்னை புறநகர் மாவட்டம் அயம்பாக்கம் பகுதியைச் சார்ந்த புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்க வரையறுக்கப்பட்ட அளவுகோலின் படி 25 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் உள்ளன. அதாவது கிழக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் அம்பத்தூர், மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் ஆவடி, வடக்கே 19 கிலோ மீட்டர் தொலைவில் செங்குன்றம், தெற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தமல்லி ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்து மற்றும் மீட்புப் பணி அழைப்புகள் அருகிலுள்ள மேற்கண்ட 4 தீயணைப்பு நிலையங்களைச் சார்ந்த  பணியாளர்கள் மற்றும் ஊர்திகளை கொண்டு மேற்கொள்ள இயலும் என்பதால், அயம்பாக்கம் பகுதியில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கும் நிலை தற்போது எழவில்லை.

அது குறித்து பேசவேண்டும் என்று கையை தூக்கி உயர்த்திக்காட்டி பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர்களுக்கெல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு சில புள்ளிவிவரங்களை நான் சொல்ல விரும்புகிறேன்.

இந்த அரசு பொறுப்பேற்று 2021-லிருந்து தமிழ்நாடு காவல் துறையில் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன. 23 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் அறிவிக்கப்பட்டு அந்த 23 நிலையங்களும் திறந்துவைக்கப்பட்டு செயல்பாட்டில் வந்திருக்கின்றன தெரிவித்துக்கொள்கிறேன். என்பதையும் தற்போது நான்

மாநிலத்தின் நிதிநிலைக்கேற்ப மாண்புமிகு உறுப்பினர்களின் கோரிக்கைகளை கனிவுடன் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு சாத்தியக்கூறு இருக்கக்கூடிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எனவே, காவல் துறை மானியக் கோரிக்கை இந்த அவையிலே தாக்கல் செய்யப்படுகின்ற நேரத்தில் நிச்சயமாக நீங்கள் திருப்தி அடையக்கூடிய வகையில் சில அறிவிப்புகளும் வரும் என்பதையும் நான் உறுதியோடு தெரிவித்து அமைகிறேன்.