சிபிஐ(எம்) உடன் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை.. தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி.. இரவுக்குள் முடிவு.?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 37 நாட்களே உள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப்பங்கீடுப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு இதுவரை காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 5 கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சு வார்த்தையை முடித்து தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்திருக்கிறது. தேமுதிகவுக்கு, 1 மாநிலங்களவைச் சீட்டை கொடுத்திருந்தாலும், சட்டப்பேரவைத் தொகுதிகளை இன்னும் இறுதி செய்யவில்லை.

இந்த சூழலில், அக்கூட்டணியில் 2019 நாடாளுமன்றத்தேர்தலில் இருந்து தொடர்ந்து வரும், சிபிஐ, சிபிஐ(எம்), விசிக ஆகிய கட்சிகளுடன் இன்னும் தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்யவில்லை. இந்த மூன்று கட்சிகளும் 2021 தேர்தலில் தலா 6 இடங்களில் போட்டியிட்டிருந்தன. ஆனால், இப்போது கூடுதல் தொகுதிகளை கேட்டுவருவதால் தொகுதிப்பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. அதிக கட்சிகளை இணைத்துள்ளதால், தொகுதிகளை அதிகமாக தரமுடியாது என திமுக தரப்பில் கூறும் நிலையில், காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் அதிகமாக கொடுத்துவிட்டு தங்களுக்கு குறைப்பது நியாமல்ல எனத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. ஏற்கனவே, இருகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், இன்று மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தைக்குப் பின், சிபி(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொகுதி உடன்பாடு குறித்து திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன், மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை திமுக பேச்சுவார்த்தை குழு உடன் தெரிவித்தோம். ஆனால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எங்களின் கோரிக்கை குறித்து முதல்வரிடம் கலந்து பேசி இன்று இரவுக்குள் தெரிவிப்பதாக கூறி உள்ளனர்

ஓரிரு நாட்களுக்குள் தொகுதி சம்பந்தமான உடன்பாடு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். கூடுதல் தொகுதிகளை பெறுவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம். அவரவர்கள் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை கூடுதலாக கேட்டுப் பெறுவது அவர்களுடைய உரிமை. அந்தவகையில், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாங்கள் ஒன்றும் தேர்தலை புறக்கணிக்கும் கட்சி அல்ல. கூடுதல் தொகுதிகளை விட குறைவாக ஒதுக்கினால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசி முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.