இந்திய நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரை 543 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி 39 மையங்களில் உள்ள 43 கட்டிடங்களில் நடைபெற உள்ளது. இம்மையங்களில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அறை வீதம் 234 அறைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கையானது நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் எனவும், காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பணியில் 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபட உள்ளனர். இதில், வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பேரும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வைக்கும் பணியில் 24 ஆயிரம் பேரும், நுண் பார்வையாளர்களாக 4 ஆயிரத்து 500 பேரும் ஈடுபடுகிறார்கள்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் பணி கண்காணிக்கப்படும்.

ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் (ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்) முன்னிலையில் தேர்தல் எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுற்று வாரியாக வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்படும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகார அட்டை வழங்கப்பட்ட பணியாளர்கள் மட்டும் உள்ளே  அனுமதிக்கப்படுவார்கள்.

பாதுகாப்பு அறைக்கான பாதுகாப்பு பணியில் மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு அடுத்தபடியாக 2-வது அடுக்காக மாநில ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 3-வது அடுக்காக உள்ளூர் போலீசார் வாக்கு எண்ணும் மையங்களின் நுழைவாயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.