திருவாரூர் மாவட்டத்தில் நடந்த வேதனையூட்டும் சாலை விபத்தில், ஒரு குடும்பத்திலிருந்து தந்தை, மகன், மகள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நன்னிலம் அருகே உள்ள வரகூர் பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 30), மயிலாடுதுறையில் கார் மெக்கானிக் கடையை நடத்தி வந்தவர். நேற்று காலை, வீட்டு தேவைக்காக மிளகாய்த் தூள் அரைக்கும் நோக்கத்தில் தனது மகன் நிரோஷன் (6) மற்றும் மகள் யாஷினி (3) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கோவில் திருமாளம் என்ற இடத்தில் உள்ள அரைவை மில்லுக்குச் சென்றார்.
தூள் அரைத்து வீடு திரும்பும் வழியில், அகர திருமாளம் அருகே ஒரு திருப்பத்தில், கரூரிலிருந்து ஜல்லி ஏற்றி வந்த ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மோகனும், அவரது பிள்ளைகளும் லாரியின் அடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து பேரளம் போலீசார் விரைந்து வந்து, லாரியில் இருந்த ஜல்லிக் கற்களை பொக்லைன் மூலம் அகற்றியபின், உடல்களை மீட்டனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
🙏 ஒரே குடும்பத்திலிருந்து மூன்று உயிர்கள் ஒரே நேரத்தில் பறிபோனது, அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.