தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் 2021-ம் ஆண்டு விளவங்கோடு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக விஜயதரணி காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றவர். காங்கிரஸ் கட்சிக்கும், இவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜனதாவில் சேர்ந்து, எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலோடு, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக நாளை 19.04.2024 நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து மொத்தம் 272 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 741 வாக்காளர்கள் நாடாளுமன்றத்துக்கு ஒரு வாக்கையும், சட்டமன்றத்துக்கு ஒரு வாக்கையும் என்று ஒவ்வொரு வாக்காளரும்  இரண்டு வாக்குகளை செலுத்த உள்ளனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால்  விளவங்கோடு தொகுதியில்  272 வாக்குச்சாவடிகளில் மட்டும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வாக்குப்பதிவு எந்திரம் என மொத்தம் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பர்ட், பா.ஜனதா சார்பில் நந்தினி, அ.தி.மு.க. சார்பில் ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.